I am Back

பதிவு போட்டு வெகுநாட்கள் ஆனதால், அனைத்து நண்பர்களும் என்னுடைய பதிவு என்ன ஆயிற்று என்று கேட்காததால், நானே ஒரு பொருத்தமான காரணத்தை தேடி கண்டுபிடித்து விட்டேன்.

நான் தற்போது புது இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதால், அங்கே இணைய இணைப்பை உடனடியாக பெற முடியவில்லை. தற்போது டாடா இண்டிகாம் நான் இணைப்பு இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து விட்டு wireless connection(தமிழில் ‘கம்பியில்லா’ என்று சொல்லாமா?) கொடுக்கப்போகிறார்கள்.

இதனால் நான் மீண்டும் என்னுடைய வலைப்பூவில் பதிவை தொடங்கி விட்டேன்.

ஜனவரி 9, 2008 at 8:34 முப பின்னூட்டமொன்றை இடுக

அந்த நாள் ஞாபகம்

கல்லூரி நாட்களில் வார இறுதியில் நண்பர்கள் நாங்கள் ஊர் சுற்றுவது வழக்கம். ஒரு முறை நான், கார்த்திக், விஜய் மற்றும் மகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏரல் ஆற்றில் குளிக்கச் சென்றோம். நாங்கள் எப்போதும் பைக்கில் செல்வது வழக்கம். பாதி வழியில் மகியின் பைக்கில் இருந்து கரும்புகை வெளியாக ஆரம்பித்தது. சற்று நேரத்தில் வண்டி நின்று விட்டது. நாங்கள் பல முறை start செய்தும் முடியவில்லை. கார்த்திக் ஒரு குட்டி மெக்கானிக். அவன் பெட்ரோல், ஸ்பார்க் ப்ளக் எல்லாவற்றையும் சோதனை செய்தான் கடைசியில் இஞ்சின் ஆயிலை பார்க்கும் போது மகி ஆயிலை மாற்றாமல் பல ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியது தெரியவந்தது.

நானும் கார்த்திக்கும் சென்று இஞ்சின் ஆயில் வாங்கி வந்தோம். புது ஆயிலை மாற்ற பழைய ஆயிலை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஆயில் டேங்க் போல்ட்டை கழற்றும் போது, அது கைதவறி மண்ணில் விழுந்து விட்டது. விஜய் போல்ட்டை எடுத்து மகியிடம் கொடுத்து “டேய், மச்சான் மண்ணை துடைடா” என்றான். மகி போல்ட்டை வாங்கி வேகமாக மண்ணில் வீசி எறிந்து காலால் நன்றாக தேய்த்தான். நாங்கள் உடனே ஏண்டா அதை தூக்கி மண்ணுல போட்ட என்று கேட்டோம். மகி “நீங்க தானடா மண்ணுல துடைன்னு கொடுத்தீங்க” என்றான். நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்த மகி திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான். சற்று நேரத்திற்கு பின் சொன்னோம் “டேய்…மகி நாங்க சொன்னது போல்ட்ல உள்ள மண்ணைத் துடைன்னு..ஆனா அது எப்படிடா உனக்கு மண்ணுல துடைன்னு காதுல கேட்டது.”

இன்று அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு வருகிறது. மகி போல்ட்டை வாங்கி எறிந்த விதமும் அதற்கு பின் அவன் முழித்த முழியும் இன்னும் என் நினைவுகளில் இருக்கின்றன.

பி.கு: நண்பன் மகி இப்போது சென்னையில் ஒரு sofware company-ல் பணிபுரிகிறான். அவன் இதை கண்டிப்பாக படிப்பான். பார்ப்போம் படித்து விட்டு என்ன செய்கிறான் என்று.

நவம்பர் 2, 2007 at 1:29 பிப பின்னூட்டமொன்றை இடுக

எனக்குப் பிடித்த கவிதைகள்

தோசைக்காரன்

அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு
ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு
ஊத்திக்கடான்னு அக்கா போட்ட
எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு
எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா.
கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார்.
தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,

ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு.
எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது
பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.

இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து
கொல்லையிலே அம்மிப் பக்கம்
மதினி சோறுகொட்டக் காத்திருக்கா.
“உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா”.

அக்கா வீட்டுக்குப் போனபோது
கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா.
“அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண?”
நாம எப்படியோ. தோசை சைவமில்லையா?
அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு.
அப்புறம் இங்கேதான் வேலை.
போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம்
ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு
குலை தெறிக்க ஓடிவந்து தருவோம்.
பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட
பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.

கார். பஸ். வெய்யில். மழை.
உசிரு.
கிடக்கு போங்க. அதுவா முக்கியம்?
இன்னும் முப்பது நிமிசத்துலே
நீங்க சாப்பிட்டாகணும்.
இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.

நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா
பஸ்காரன் கேக்கறான் – “சாவறதுக்கு வந்தியாடா?”

மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி
மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா.
யாரோட அம்மாவோ.
“தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான்”னாங்க.
எல்லோரும் சிரிக்கிற சத்தம்.
எனக்குத்தான் அழுகை.
லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு
என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.

நாள்தோறும்

பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,
பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,
காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்
தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,
சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,
பாத்திரம் ஒழித்துப் போட்டு,
பசங்களைப் படுக்கையில் விட்டு,
மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து இருட்டில்
மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்
வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,
வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள். பெய் என்றாள்.

இந்த கவிதைகளை “ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைபிரசவம்” தொகுப்பில் இருந்து எடுத்தது. இதை எழுதியது இரா.முருகன் என்னும் கவிஞர். இந்த தொகுப்பில் இதே போல் மேலும் சில நல்ல ரசிக்கத்தக்க கவிதைகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது வெளியிடுகின்றேன்.

ஒக்ரோபர் 26, 2007 at 2:34 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஹேக்கிங் ஊடுருவல் சாதனங்கள் விற்பனைக்கு

கணினி தொழில்நுட்பம் தொடங்கிய நாள் முதலே இந்த ஹேக்கிங் என்ற சைபர் குற்றங்களும் தொடங்கிவிட்டன. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு விதமாக கணினித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்போது அதன் கூடவே ஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்களும் அதற்கு சமமாக வளர்ந்து நிற்கிறது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி இதனைத் தடுக்க என்னதான் கணினி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்தாலும் அத்தகைய சாதனங்களின், மென்பொருட்களின் சக்தியையும் கடந்து இன்று ஹேக்கிங் மகா பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது.

இந்த “வளர்ச்சி”யின் தொடர்ச்சியாக தற்போது ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் விற்பனைக்கு வேறு வந்துள்ளதாம்!

அதாவது “வளர்ந்து வரும்” ஹேக்கர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று செக்யூர் கம்ப்யூட்டிங் கார்ப்பரேஷன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது தனிப்பட்ட வைரஸ்கள் முதல் மேலும் எளிதான பல தொழில்நுட்பங்களை விற்பனைக்கு விட்டுள்ளதாம் சில ஹேக்கிங் கும்பல்கள்.

இந்த ஹேக்கிங் சாதனங்களை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்கேயுரிய பாணியில் கணினித் தாக்குதல்களை செய்யமுடியும்.

தற்போது மட்டும் இதுபோன்ற ஆன்லைன் ஹேக்கிங் கருவிகள் மட்டும் 68,000 உள்ளதாக செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செக்யூர் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் பெஞ்சமின் லோ கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாய் உள்ளது.

“சைபர் குற்றங்கள்” அதிவேகமாக அதிர்ச்சியூட்டும் வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த ஒரு உயர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு அரணையும் தகர்த்து நெட்வொர்க்குகளை நாசம் செய்ய புதிய மற்றும் நுட்பமான ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதனை சாதித்த பிறகு அவர்கள் அடுத்தபடியாக அதனை விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு அந்த துறை வர்த்தக அளவில் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது” என்று எச்சரிக்கிறார்.

இந்த ஹேக்கிங் சாதனங்கள் பெரும்பாலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை செயல்படுத்துவதற்கு திறமை அவசியம். ஹேக்கர்கள் தற்போது எம்பேக் (Mpack), ஷார்க்2, நியூக்ளியர், வெப் அட்டாக்கர் (Webattacker) மற்றும் ஐஸ்பேக் (Icepack) ஆகிய ஹேக்கிங் கருவிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை பயன்படுத்தி எந்த ஒருவரும் எளிதாக ஹேக்கிங்கில் ஈடுபடலாம். இதனால் சைபர் கிரைம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் அதனுள் நுழைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது முதல் தர ஹேக்கிங் கருவிகள் 1000 டாலர்களுக்கு கிடைப்பதோடு, 12 மாத தொழில்நுட்ப உதவி வேறு இதில் கிடைக்கிறதாம்.

இந்த ஹேக்கிங் கருவிகள் விற்பனையில் அவர்களுக்கு எந்த வித இடர்பாடும் இல்லை. அதாவது இந்த கருவிகளை பயன்படுத்தி ஹேக்கிங் செய்தாலும், இதனை வடிவமைத்த, விற்பனை செய்த நபர்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இக்கருவிகள் “இந்த மென்பொருள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே” என்ற பெயரில் உள்ளது.

எனவே ஹேக்கர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த விற்பனையிலும் அவர்கள் கொடிகட்டி பறக்க துணிந்து விட்டார்கள். என்ன செய்யப்போகிறது கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஒக்ரோபர் 24, 2007 at 1:33 பிப பின்னூட்டமொன்றை இடுக

எதிலோ படித்த கவிதை

மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்

-எழுதியவர் பெயர் தெரியவில்லை

செப்ரெம்பர் 28, 2007 at 4:25 பிப பின்னூட்டமொன்றை இடுக

புதுக்கவிதைகள்

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
‘பாபி’ பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)

அருமையாய் நடித்தனர்…
(என டயரியில் எழுதுகிறாராம்)

இலக்கண சுத்தததோடே
எழுதனும் கவிதை என்றார்
கையிலே வாங்கிப் பார்த்துக்
கழிநெடில் விருத்தம் என்றார்
ஒருவரி உரசிப் பார்த்தார்
கருவிளங் காய்ஈ தென்றார்
மற்றொரு வரியைச் சுட்டி
மாற்றிந்தச் சீரை என்றார்
அக்கக்காய்க் கழற்றிப் போட்டார்
அருந்தமிழ்ப் பெயர்கள் சொன்னார்
கடைசியில் திருப்பிப் பார்த்தேன்
கவிதையைக் காணோம் அங்கே!

செப்ரெம்பர் 12, 2007 at 12:05 முப 3 பின்னூட்டங்கள்

முதன்முதலாய் அம்மாவுக்கு

கவிப்பேரரசு வைரமுத்துவை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். அவருடைய கவிதைத் தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்று….

முதன்முதலாய் அம்மாவுக்கு

ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?

பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா?

இந்த கவிதையை பாடகர் S.P.B தன் அழகான குரலில் உருக்கமாக பாடியுள்ளார். கவிதையை வாசித்து முடித்த கையோடு இந்த பாடலைக் கேளுங்கள். கவிதையின் மேன்மை உங்களுக்கு புரியும்.

பாடலைக் பார்க்க/கேட்க மேலே கிளிக்கவும்.

ஓகஸ்ட் 30, 2007 at 1:59 பிப பின்னூட்டமொன்றை இடுக

இசை கேட்டு வாழ்வோம்

இசையின் இனிமையில் மயங்காதவர் யாருளர்? இசையில்லாத இவ்வுலகில் யாராவது வாழமுடியுமா? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.

மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது Charles Darwin-னின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.

தாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக்காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. German மொழியில் Johannes Brahms என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை Bertha Faber என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் lullaby என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக Mockingbird என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.

“Hush little baby, don’t say a word Momma’s going to buy you a mockingbird”

என்று ஆரம்பமாகி முகம் பார்க்கும் கண்ணாடி, குதிரையும் வண்டியும், வேறும் பல விலையுயர்ந்த பொருள்கள் என பல தருவதாக இந்த ஆங்கிலத் தாலாட்டு உறுதி கூறுகிறது.

ஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு அதாவது pattern கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு அதாவது prognostic function ஆகியவற்றை அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஓசைச் சிறப்பால் ஏற்படுகிறது.

மரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புகின்றனர்.

தமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.

தாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.

தாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ இசை வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.

இசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளில் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைகளும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.
Washington பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. Classical இசையைக் கேட்ட மக்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.

இசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம், (blood pressure) இதயத்துடிப்பு (heart rate) சுவாசிப்பு, (breathing) மூளை அலைகள், (brain waves) மற்றும் immune response ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங்களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் (Brisbane Royal Children’s Hospital) 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த Jane Edwards இவ்வாறு கூறுகிறார்- இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
மூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான Oliver Sacks பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் (Alzheimer) உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.

பூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.

1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று Mozart’s Piano Sonata K448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் spatial IQ குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் preschoolers எட்டு மாதங்கள் keyboard படித்த போது அவர்களது spatial IQ 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The Secret Power of Music என்ற தனது நூலில் David Tame என்பவர் classical இசையை இடைவிடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் Led Zeppelin, Jimi Hendrix ஆகிய இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.

இசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நான்கு வழிகள் கூறப்படுகிறது.
1. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.
2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.
3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.
4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது அதாவது out of tune இல் மிகப் பலமாகக் கத்திப் பாடவேண்டும்.

பாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி: திண்ணை.காம்

ஓகஸ்ட் 25, 2007 at 6:33 முப பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ போட்டி

இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.

  1. திண்ணையிலிருந்து
    நிலவை ரசிப்போம்
    தொலைந்தது வீட்டுச்சாவி
  2. மழை வருவதற்குள்
    போய் பார்க்க வேண்டும்
    அவள் போட்ட கோலம்
  3. மறுமுறையும்
    இயேசு வரமாட்டார்
    எல்லார் கையிலும் சிலுவை

ஓகஸ்ட் 16, 2007 at 11:46 முப 2 பின்னூட்டங்கள்

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

வலைபதிவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

ஓகஸ்ட் 15, 2007 at 4:59 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts Newer Posts


பிரிவுகள்

  • Blogroll

  • ஓடைகள்